தமிழ் படிப்பித்தவன் தாய் ஆகட்டும் !


❖  கொஞ்சம் தேநீர் அமர சுவைத்திருக்கலாம்
    கொஞ்சி உறவுகளோடு கதைத்திருக்கலாம்
    இன்னமும் இரண்டுநாழி படுத்திருக்கலாம்
    இரவு காவியமொன்று இரசித்திருக்கலாம்

❖ ஓய்வு நாளென்று ஒதுங்காது – மொழி
    ஆய்வு நன்றென்று வந்தார்கள்
    தம் பிள்ளையை வீட்டில் விட்டு
    தமிழ் பிள்ளைகள் பேண சென்றார்கள்

❖ ஆசையாய் கூடி வந்தார்கள்
    ஆசானாய் மாறி நின்றார்கள்
    தவழ்ந்து சென்ற பிள்ளைக்கெல்லாம்
    மகிழ்ந்து தமிழ் தந்தார்கள்

❖ கொடி படர்ந்த முல்லைகள்
    செடி மலர்ந்த பிள்ளைகள்
    வேரில் தமிழை ஊற்றினார்கள்
    விழியில் ஒளியை ஏற்றினார்கள்

❖ ஆயிரம் ஆண்டுச் சங்கிலியை
    அறுந்து விடாது காக்கிறார்கள்
    பாயிரம் பாடி பழங்கதைபேசி
    பறந்து விடாது பதிக்கிறார்கள்

❖ தலைமுறை தாண்டி பாயட்டும்
    தண்ணீர்போல் தமிழ் ஓடட்டும்
    கடல் தாண்டிய கண்டமிது
    காற்றோடு தமிழ் ஒலிக்கட்டும்

❖ தமிழை அமுதை ஊட்டியவர்கள்
    தாயாய் தாமே மாறியவர்கள்
    ஆதாயம் இன்றி உழைப்பவர்கள்
    ஆகாயம் விடவும் உயர்ந்தவர்கள்

❖ வணங்கி நன்றி சொன்னால் போதுமா?
    வாஞ்சை முத்தம் கொடுத்தால் தீருமா?
    எழுத் தறிவித்தவன் இறைவன் ஆகட்டும்
    தமிழ் படிப்பித்தவன்
தாய் ஆகட்டும்!

    2023


துளிரட்டும்

இளந்தளிர்!

This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


5 − one =